திருமலை : திருமலையில் உலக மக்கள் நன்மைக்காக பாலகாண்ட அகண்ட பாராயணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள நாதநீராஞ்சன மேடையில் உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டி பாலகாண்ட அகண்ட பாராயணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 14வது கட்ட பாலகாண்ட அகண்ட பாராயணம் நேற்று சீதா, லட்சுமண சமேத ராமர், அனுமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 66 முதல் 70 வரையிலான 134 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. மேலும், யோகவாசிஷ்டம் - தன்வந்திரி மஹாமந்திரம் 25 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. வேத பண்டிதர்கள் அகண்ட பாராயானம் செய்ய ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் அவர்களை பின்தொடர்ந்து பாடினர்.
இதில் எஸ்.வி.வேதிக் பல்கலைக்கழக ஆச்சார்யா பிரவ ராமகிருஷ்ண சோமயாஜி, தர்மகிரி வேத பள்ளி பண்டிதர்கள் கே.ராமானுஜாச்சாரியுலு மற்றும் பிவிஎன்என்.மாருதி ஆகியோர் ஸ்லோகம் வாசித்தனர். அகண்ட பாராயணத்தில் தர்மகிரி வேத பள்ளி ஆசிரியர்கள், எஸ்.வி.வேத பல்கலைக்கழக ஆசிரியர்கள், எஸ்.வி. உயர் வேத பல்கலைக்காக வேத பாராயண பண்டிதர்கள், ராஷ்ட்ரிய சமஸ்கிருத பல்கலைகழக பண்டிதர்கள், அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.