சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியில் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் பொது மக்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வீதம் பத்து மாதம் பணம் தருவதாகவும், 2 கிராம் தங்க காசு தருவதாகவும் சொல்லி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் ரூ.2,400 கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் உறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்நிறுனத்தைச் சேர்ந்த 6 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கே.ஆர்.கோயில் தெருவை சேர்ந்த ரூசோ(42) என்ற மேலும் ஒரு முக்கிய நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.