சென்னை: சினிமாவில் 5 ஆண்டுகள் நிறைவு செய்தது பெருமையாக இருக்கிறது என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி. இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஹலோ தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்புவுடன் மாநாடு படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கூறியது: இப்போதுதான் ஹலோ படத்தில் நடித்தது போல் இருக்கிறது.
அதற்குள் 5 வருடங்கள் கடந்துவிட்டது. இந்த 5 வருடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 12 படங்களில் நடித்துள்ளேன். 5 வருடத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என எனது நண்பர்கள், உறவினர்கள் சொல்கிறார்கள். அது பற்றி நான் கவலைப்படவில்லை. வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏற்பதாக இருந்தால் கண்டிப்பாக 50 படங்களில் நடித்து முடித்திருப்பேன். ஆனால் அப்பா பிரியதர்ஷன் என்னிடம் சொன்னது, எண்ணிக்கை முக்கியமல்ல.
நல்ல சினிமாவில் நீ இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்பார். அதைத்தான் இன்று வரை நான் கடைப்பிடித்து வருகிறேன். என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததில் ரசிகர்களின் பங்கு அதிகம். அவர்களுக்கு என்றும் நன்றியுடையவளாக இருப்பேன். இவ்வாறு கல்யாணி கூறினார்.