பெரம்பூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக கொளத்தூர் கிழக்கு பகுதி இளைஞர்அணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலதிட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர் காமராஜ் நகரில் நடந்தது. கொளத்தூர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் தனசேகர் தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். நலதிட்ட உதவிகளை வழங்கி பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. 26 லட்சம் லிட்டர் பால் தான் கடந்த ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது திமுக ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, பச்சை பால் பாக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான அளவு பால் விநியோகிக்கப்படுகிறது. ஆரஞ்ச் நிற பாக்கெட் விற்பனையும் குறையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கலாநிதி வீராசாமி எம்பி, திரு.வி.க நகர் மண்டல குழு தலைவர் சரிதா, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.