×

மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்க ஏற்பாடு: திருச்செந்தூர்- நெல்லை- தென்காசி வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டம்

நெல்லை: திருச்செந்தூர் - நெல்லை - தென்காசி, மதுரை - வாஞ்சி மணியாச்சி, நாகர்கோவில் - நெல்லை பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்த இடங்களில் ரயில்கள் வேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. பாசஞ்சர் ரயில் செல்லும் இடங்களில் கூட மின்மயமாக்கப்பட்ட பின்னர் ரயில்கள் வேகமாக செல்கின்றன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில் பாதை பிரிவுகளில் ரயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக ரயில் பாதைகளை பலப்படுத்துதல், மின்மயமாக்கல், ரயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் ரயில்களின் வேகத்தை ரயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி மணிக்கு 160 கிமீ மற்றும் 130 கிமீ என அதிகரிக்க முடியும்.
134.78 கிமீ தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கிமீட்டரிலிருந்து 130 கி.மீ என அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உரிய அனுமதிக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள இந்த ரயில் பாதையில் ரயில்களை அதிவேகத்தில் இயக்குவதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். ‘பி’ பிரிவு ரயில் பாதைகளாக கூறப்படும் அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பிரிவுகளில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கிமீ வேகத்தில் இருந்து, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 130 கிமீ என வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி ரயில்கள் இயக்கப்படும் 144.54 கிமீ தூரம் உள்ள அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பாட்டு பணிகளை முடித்து ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2022-23ம்  நிதியாண்டில் இதுவரை விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூர் - பொன்மலை, விழுப்புரம் - காட்பாடி, நாகர்கோவில் - நெல்லை, விழுப்புரம்- புதுச்சேரி, தஞ்சாவூர்- காரைக்கால், கோயம்புத்தூர் வடக்கு - மேட்டுப்பாளையம் ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகம் மணிக்கு 80 கிமீ முதல் 100 கிமீ என உள்ளது. இப்பாதைகளில் மணிக்கு 110 கிமீ என வேகம் அதிகரிக்க ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்று விட்ன. மேலும் இந்த நிதியாண்டில் நெல்லை - திருச்செந்தூர், தாம்பரம் - செங்கல்பட்டு, நெல்லை - தென்காசி, சேலம்- கரூர்- நாமக்கல், கடலூர் துறைமுகம் - விருத்தாச்சலம், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை- வாஞ்சி மணியாச்சி ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகம் மணிக்கு 70 கிமீ முதல் 100 வரை மட்டுமே உள்ளது.

இவற்றை 110 கிமீ என வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில் பாதை அமைப்புகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டி உள்ளது. அவற்றில் ரயில் பாதைகளை முழுமையாக மாற்றி அமைப்பது, தேவையான இடங்களில் 60 கிலோ கிராம் எடை கொண்ட தண்டவாளங்கள் அமைப்பது, பாலங்களை பலப்படுத்துவது, வளைவுகளை நேர்படுத்துவது, ரயில் பாதைகளில் பொதுமக்கள் கடக்கும் அனுமதி இல்லாத இடங்களில் பொதுமக்கள் கடப்பதை தடுக்க சுவர்கள் கட்டுவது, சைகை விளக்குகளை தானியங்கி விளக்குகளாக மேம்படுத்துவது, வேகத்திற்கு தடை ஏற்படுத்தும் மின்மய அமைப்புகளை மாற்றி அமைப்பது ஆகியவை முக்கிய பணிகளாகும். குறிப்பிட்ட வழித்தடங்களில் தெற்கு ரயில்வே அப்பணிகளை செய்து முடித்துள்ளது.

விரிவான திட்ட அறிக்கை
இந்திய ரயில்வேயில் 8 வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ  என அதிகரிக்க ரயில்வே வாரியம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ரயில்வே  மண்டலங்கள் தங்கள் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேகம் அதிகரிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 362 கிமீ தூரம் கொண்ட சென்னை - பெங்களூர் ரயில் வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்து ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ என அதிகரிக்க சம்பந்தப்பட்ட ரயில்வேக்களும் விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளன.


Tags : Thiruchendur-Nella-Thengasi , 110 Km/h speed arrangement: Plan to increase train speed on Tiruchendur-Nellai-Thenkasi route
× RELATED மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்க...