உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 56 நாள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், 56 நாள் போராட்டத்திற்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேரை தவிர்த்து மேற்பார்வையாளர்கள், சுங்க வசூலிப்பாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை முதல் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இதனால் டோல்கேட்டில் வழக்கம் போல் சுங்கவசூல் பணிகள் நடந்தது. இருப்பினும் பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பணியாளர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.