தாம்பரம்: அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வழங்கினார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 1,850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான மேசை, நாற்காலி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், இப்பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு மேசை, நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பல்லாவரம் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.11 லட்சம் செலவில் மேசை, நாற்காலிகளை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘இப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக கழிப்பறை கட்டிடம் ஆகியவை அமைத்து தரப்படும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில், பகுதி கழக செயலாளர் ஜெயக்குமார், பொது சுகாதார குழு தலைவர் நரேஷ்கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வாணிஸ்ரீ விஜயகுமார், கலைவாணி பிரபு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.