சென்னை: எழுத்தாளர் ஆரூர்தாஸ் மறைவுக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் திரைவுலகில் சிறந்த வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் ஆரூர்தாஸ்(91). கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது பெற்றவர். தனது வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், கலைத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.