சென்னை: செவ்வாப்பேட்டை ரயில் நிலையில் அழுது கொண்டிருந்த 2 குழந்தைகளை போலீசார் மீட்டு, அவர்களின் பெற்றோர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 2ல் ஒன்றரை வயது பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தை என 2 குழந்தைகள் தனியாக அழுது கொண்டிருப்பதாக திருவள்ளூர் ரயில் இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர் பொற்செல்வி, காவலர் தினேஷ்குமார் ஆகியோர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் சென்று அங்கு அழுது கொண்டிருந்த 2 குழந்தைகளையும் மீட்டனர். குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்பதும் தெரியவில்லை. அதே நேரத்தில், குழந்தைகளை தெரியாமல் தவறவிட்டு விட்டார்களா அல்லது வேண்டுமென்றே ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றார்களா என்பது குறித்து இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் குழந்தைகள் காணாமல் போனதாக எந்த புகாரும் இல்லாததால் மீட்கப்பட்ட 2 குழந்தைகளையும், திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக போலீசார் தெரிவித்தனர்.