பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 5 பேருந்து நிழற்குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில இடங்களில் பேருந்து நிழற்குடைகள் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. இதனையடுத்து வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் செலவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்கேபி நகர், கண்ணதாசன் நகர், பாரதி நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட 5 இடங்களில் புதிதாக பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த பேருந்து நிறுத்த நிழற்குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் முருகன், ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, முல்லை நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா மற்றும் கால்பந்தாட்ட விளையாட்டு திடல் உள்ளிட்டவற்றை எம்எல்ஏ ஆர்.டி.சேகர் பார்வையிட்டார். தற்போது, பெய்த மழையின் காரணமாக கால்பந்தாட்ட மைதானத்தில் சில இடங்களில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக உள்ளதால், அப்பகுதி இளைஞர்கள் விளையாட சிரமப்படுவதாக தெரிவித்தனர். இதனையடுத்து, உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்து தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.