×

திருவிக நகரில் நடந்துசென்ற மூதாட்டியிடம் 2 சவரன் தாலி செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

பெரம்பூர்: திருவிக நகரில் நடந்துசென்ற மூதாட்டியிடமிருந்து 2 சவரன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை திருவிக நகர் கேசி கார்டன் 4வது தெருவை சேர்ந்தவர்  நீலகண்டன் (66). இவரது மனைவி சுப்புலட்சுமி (60). நீலகண்டன் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் 11 மணியளவில் சுப்புலட்சுமி தனது தங்கை தேவி என்பவரின் வீட்டிற்கு செல்வதற்காக திருவிக நகர் அய்யாலு தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் நடந்து வந்த ஒருவர் சுப்புலட்சுமி கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி செயினை பறிக்க முற்பட்டபோது, சுப்புலட்சுமி செயினை பலமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால், அந்த நபர் செயினை அறுத்துக்கொண்டு ஓடினார். இதில் 3 சவரன் தாலி சரடு சுப்புலட்சுமி கையிலும், மீதி 2 சவரன் மதிப்புள்ள செயின் திருடனின் கையிலும் சிக்கியது. இதனையடுத்து, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 2 பேருடன் மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடினார். சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பெயரில் சம்பவ  இடத்திற்கு வந்த, திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Tiruvika , 2 sawan thali chain snatched from old lady walking in Tiruvika city: net for mysterious people
× RELATED வடசென்னையில் அதிநவீனமாகும் 6 பஸ்...