×

தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண் குத்திக்கொலை: கணவனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட காதலன் கைது

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கல்லாவி அடுத்த வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னமுத்து(40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சீதா(36). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த சீதா, கடந்த 2 வருடங்களாக தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த வாரம் ஆனந்தூர் அடுத்த செங்கல்நீர்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சீதா சென்றுள்ளார். கடந்த 22ம் தேதி, செங்கல்நீர்பட்டிக்கு குடிபோதையில் சென்ற சின்னமுத்து, அங்குள்ள மாத்தோப்பிறகு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார்.  அப்போது தன்னுடன் குடும்பம் நடந்த வருமாறு சின்னமுத்து கூறவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சின்னமுத்து, சீதாவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில், சம்பவ இடத்திலேயே சீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘போச்சம்பள்ளி அடுத்த கீழ்சங்கப்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவருக்கும், சீதாவுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த சின்னமுத்து, மனைவியை கண்டித்ததால், கணவரை பிரிந்த சீதா, குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால், பிரகாஷூடன் அவர் உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், உறவினர் வீட்டுக்கு சென்ற சீதாவை சின்ன முத்து மாந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சின்னமுத்துவுடன், ராம்குமார்(20) மற்றும் 17 வயது சிறுவன் உடன் சென்றுள்ளனர். மாந்தோப்பில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது, அங்கு சீதாவின் காதலன் பிரகாஷ் வந்துள்ளார். அவருக்கும், சின்னமுத்து தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரகாஷ் அங்கிருந்து சென்று விட்டார். அந்த நேரத்தில், சீதாவை ராம்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இறுக பிடித்துக்கொள்ள, சின்னமுத்து கத்தியால் குத்தி கொலை செய்ததுள்ளார்,’என்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கொடமாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில், சின்னமுத்து, ராம்குமார் உள்பட 3 பேர் சுற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சீதாவின் காதலன் பிரகாஷ் நாட்டு துப்பாக்கியால் சின்னமுத்துவை சுட்டுள்ளார். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் பிரகாஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், சின்னமுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராம்குமார் உள்பட 2 பேரை, நேற்று மாலை கொடமாண்டப்பட்டியில் போலீசார் கைது செய்தனர்.

The post தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண் குத்திக்கொலை: கணவனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Chinnamuthu ,Vellimalai ,Bochampalli Kallavi ,Krishnagiri district ,Sita ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை