கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம் பகுதிகளில் அரசு சார்பில் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், ஆந்திர மாநில எல்லை பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரி தீவில் வடகோடி, இருக்கம் பகுதிகளில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் சுமார் 6 கிமீ பழவேற்காடு ஏரி வழியாக படகு மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழைக் காலங்களில் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத நிலையும் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணனிடம் வடகோடி, இருக்கம் பகுதி மாணவர்கள் சார்பில் தமிழக அரசு இலவச படகு சேவையை விடவேண்டும்’ என வலியுறுத்தினர். பின்னர், தனித்தனியே லைப் ஜாக்கெட் தைத்து தருவதற்கான பணிகளை வட்டாட்சியர் கண்ணன் மேற்கொண்டார். இப்பணிகள் இன்னும் சில வாரங்களில் முடிவடைந்ததும் கலெக்டர் முன்னிலையில் 60 மாணவர்களுக்கும் படகில் சென்று வருவதற்கு தோதாக லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும் என வட்டாட்சியர் கண்ணன் தெரிவித்தார்.