திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், நேற்று பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கிய அவர்கள், கிரிவலப் பாதை முழுவதும் ஆன்மிக பாடல்களுக்கு தகுந்தபடி நடனமாடிக் கொண்டே சென்றனர். நடன கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியை நாட்டியப் பள்ளியை சேர்ந்த வத்திகொட்டா யாதகிரிசாரியா தலைமையில் செய்திருந்தனர். நடந்து கிரிவலம் செல்வதே கடும் சவாலாக அமையும் நிலையில், நாட்டியமாடியபடி 18 நடன கலைஞர்கள் கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உலக சாதனை முயற்சியாக இதனை மேற்கொண்டதாக நடன கலைஞர்கள் தெரிவித்தனர்.