அகமதாபாத்: மார்பி தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணிக்கு ஏன் டெண்டர் விடப்படவில்லை? என்று கு ஜராத் உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்த்தில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டு இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த தொங்கு பாலம் கடந்த மாதம் 30ம் தேதி அறுந்து விழுந்தது. இதில் 135 பேர் பலியாகினர். பராமரிப்பு பணி முடிந்து திறக்கப்பட்ட 5 நாளில் இந்த விபத்து நடந்ததால், இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
கடிகாரம் தயாரிக்கும் கம்பெனிக்கு பாலத்தை பராமரிப்பதில் எந்த முன் அனுபவம் இல்லாதபோது, எப்படி அவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அரவிந்த் குமார், நீதிபதி ஆசுதோஷ் சாஸ்திரி ஆகியோர் அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து, குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நாட்டிலேயே பெரிய மாநிலத்தில் ஒரு அரசாங்க அமைப்பு செயலிழந்து விட்டது.
இறுதியில் 135 பேர் கொல்லப்பட்டனர். நோட்டீஸ் அளித்தும் இன்று நகராட்சி சார்பில் எந்த அதிகாரிகளும் வராததால், அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். பாலம் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன் அதன் தகுதியை ஆராய்ந்து சான்றளிப்பதற்கான நிபந்தனைகள் ஏதேனும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உள்ளதா? அதற்குப் பொறுப்பான நபர் யார் என்பது குறித்த விவரங்களுடன் அதிகாரிகள் ஆஜராக வேண்டும். இந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணிக்கான ஏன் டெண்டர் விடப்படவில்லை?’ என கேட்டனர்.