×

டெண்டர் அறிவிப்பை தவிர எந்த திட்டத்தையும் எடப்பாடி நிறைவேற்றவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி

சென்னை: நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெண்டர் அறிவித்ததை தவிர மக்களுக்கான எந்த திட்டத்தை நிறைவேற்றினார் என்று கூற முடியுமா என்ற அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று அளித்த பேட்டி: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம்-கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய 3 பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு காரணம் மாங்காடு, பூந்தமல்லி காட்டுப்பாக்கம் தண்ணீர் போரூர் ஏரிக்கு வந்து மதுரவாயல் புறவழிச் சாலையில் தண்ணீர் உரிய கல்வெர்ட் அமைக்காததால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஐய்யப்பன் தாங்கல், பரணிப்புத்தூர், சின்னபனிச்சேரி, கொளத்துவான்சேரி ஆகிய பகுதியிலிருந்து ஆண்டுதோறும் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக என்னை அழைத்து சென்று இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்  என அறிவுறுத்தி, அதிகாரிகளுக்கு எல்லாம் உத்தரவிட்டு இந்த நிலைய முற்றிலுமாக போக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கி தந்தார். செம்பரம்பாக்கத்தில் இருந்து வரும் தந்தி கால்வாய்க்கு கட் அண்டு கவர் அமைக்கும் பணியும், போரூரிலிருந்து ஒரு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் வரதராஜபுரம், முடிச்சூர் மழையால் எந்த அளவிற்கு பாதித்தது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். 8000 முதல் 10000 பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி இப்பகுதிக்கு வரவே இல்லை. இப்போது  நாங்கள் வந்த பிறகு இந்த பகுதியில்  தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா. தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் முன்னாள் முதல்வர் செருப்பளவு உள்ள தண்ணீர் பகுதியில் மட்டுமே நடந்து மக்களிடம் குறைகளை கேட்கிறார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மணப்பாக்கம் கால்வாய், கொளப்பாக்கம் கால்வாய்களில் தண்ணீரே செல்லவில்லை. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபின்தான் மணப்பாக்கம், கெருகம்பாக்கம் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, அகலப்படுத்தி கரைகளை உயர்த்தி கட்டி வருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2,3 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இப்பணிகள் மழைக்காலம் முடிந்தவுடன் விரைவாக முடிக்கப்படும். வருங்காலங்களில் இப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுக்கப்படும். மாங்காடு, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு வந்து சேரும் தண்ணீர் போரூர் ஏரியின் வழியாக அடையாற்றில் கலக்க வேண்டும். அதற்கான கால்வாய்களை அமைப்பதற்கு தான் முதல்வர் நிதி ஒதுக்கி தற்போது பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

தற்போது ஆய்வு செய்யும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 9 ஆண்டு காலமாக நெடுச்சாலைத்துறை மற்றும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த போது ஆட்சி முடியும் தருவாயில், டெண்டர் மட்டும் வைத்தது ஏன்.  அவை எல்லாம் அவைக் குறிப்பில் உள்ளது.  எதிர்கட்சி எம்.எல்.ஏ என்ற காரணத்தினாலேயே மக்களின் பிரச்னை என்று கூட கருதாமல் எந்தவித பணியையும் இவர்கள் செய்யவில்லை. இன்று வந்து மக்களை சந்திப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Minister ,T.R. Moe Andarasan , Tender notification, Edappadi, not executed, Minister Thamo. Anparasan, reply
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...