சென்னை: கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா (38). இவரது கணவர் வெங்கடேசன், மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் சுகன்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7ம் தேதி இரவு சுகன்யாவின் கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், பலத்த தீக்காயமடைந்த சுகன்யா, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்தார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுகன்யாவின் கடைக்கு பக்கத்தில் மோட்டாருக்கு காயில் கட்டும் கடை வைத்திருந்த புதுப்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த குமார் (57), பெட்ரோல் பாட்டிலுடன் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து, போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த குமார், நேற்று காலை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: சுகன்யா தனது பக்கத்து கடைக்காரரான குமாருடன், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்துள்ளார். இதனால், அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும், குமார் செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை விரும்ப தொடங்கி இருக்கிறார். இதுபற்றி அறிந்த சுகன்யா, குமாரிடம், உங்களிடம் நான் தவறான முறையில் பழகவில்லை. அவ்வாறு நினைத்தால் இந்த கடை பக்கம் வரக்கூடாது என்று கூறி கண்டித்துள்ளார். ஆனாலும், குமார் காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சுகன்யா வெளிநாட்டில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் செல்போனில் தொடர்புகொண்டு குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், கேனில் பெட்ரோல் வாங்கி வந்து, இரவு கடையில் இருந்த சுகன்யா மீது ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.