சென்னை: ஒன்றிய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடித்தத்தில் கூறியுள்ளதாவது: பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது.
கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.