×

பொள்ளாச்சி பட இயக்குனருக்கு கொலை மிரட்டல்

சென்னை: புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து இயக்கியுள்ள படம், ‘பொள்ளாச்சி’ கடந்த ஆட்சியின்போது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். சங்கர், நித்யா, கஞ்சா கருப்பு, வையாபுரி நடித்துள்ளனர். ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்ய, காந்த் தேவா இசை அமைத்துள்ளார். இப்படத்தை திரையிடவிடாமல் சிலர் தடுப்பதாகவும், அதையும் மீறி வெளியிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுவதாகவும் நேசம் முரளி புகார் சொன்னார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
நிஜ சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாக்குவது என் பாணி. ஏற்கனவே ‘கொள்ளிடம்’ படத்தில், நரிக்குறவர்களின் வாழ்க்கையை படமாக்கினேன். ‘கபிலவஸ்து’ படத்தில், பிளாட்பாரத்தில் குழந்தைகளை திருடும் கும்பல் பற்றி சொன்னேன். இப்போது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி படமாக்கியுள்ளேன். இது கற்பனை கதை இல்லை.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளிலும், டி.வி.,களிலும் வெளியான தகவல் மற்றும் தனிப்பட்ட முறையில் நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளேன்.

தீயவர்கள் பற்றி இந்த உலகத்துக்கு தெரிந்தால்தான் தீமைகளை தடுக்க முடியும் என்பதற்காகவே இப்படத்தை கடன் வாங்கி உருவாக்கியுள்ளேன். ஆனால், படத்தின் டீசருக்கு கூட தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர். இதற்கே இப்படி என்றால், முழு படத்துக்கும் சான்றிதழ் தருவார்களா என்று தெரியவில்லை. அது மட்டுமின்றி, தொடர்ந்து எனக்கு போனில் கொலை மிரட்டல் வருகிறது. ஊரிலுள்ள என் குடும்பத்தினருக்கு போன் செய்து, ‘படத்தை வெளியிட்டால், அவனை காணாமல் செய்துவிடுவோம்’ என்று மிரட்டுகின்றனர். இதனால், வெளியில் நடமாட பயமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pollachi , Director of Pollachi Film, Murder Threat
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!