சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் ஒரு தளத்திலிருந்து, மற்றொரு தளத்திற்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள நோயாளிகளை, பதற்றமின்றி கொண்டுசெல்ல தரைதளம் முதல் 4 மாடி வரை சாய்தள ரேம்ப் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதை நோயாளிகள் பயன்படுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ், மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் பி.கே.ரவி ரேம்ப்பில் நடந்து வந்து தொடங்கி
வைத்தார்.
அப்போது, மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் கூறுகையில், ‘பேரிடர் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் குழந்தைகள் உள்பட நோயாளிகள் பாதுகாப்புடன் பயமின்றி வெளியேறவும், சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசின் அறிவுறுத்தலோடு இந்த சாய்தள ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது. லிப்டை விட குறுகிய நேரத்தில் நோயாளிகளை கொண்டுசெல்ல இது உதவும். மருத்துவமனையின் பிரதான கட்டிடத்திலிருந்து, இன்டர்நேஷனல் பிளாக் உடன் இணைக்கும் வகையில் உள்ளது. தீயணைப்பு மீட்பு சேவைகள் துறையின் தீ பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நெறிமுறையுடன் கட்டப்பட்டுள்ளது. இதில், பேரிடர் காலங்களில் பணியாற்ற பயிற்சிபெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் டிஜிபிக்கள் ரமணி, அனூப் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.