×

செவல்பட்டியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி: வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. செவல்பட்டியை சுற்றிலும் கொட்டமடக்கிபட்டி, மேலாண்மறைநாடு, அம்மையார்பட்டி, மீனாட்சிபுரம், குகன்பாறை, அலமேலுமங்கைபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க செவல்பட்டி வந்து செல்கின்றனர்.

இதனால் செவல்பட்டியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கும் செவல்பட்டி வந்து செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைபள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். செவல்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு மருத்துவர், 2 கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செவல்பட்டியை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் சிகிச்சைக்காக செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்கு தினமும் 50 க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவசர சிகிச்சைக்கு 15 கி.மீ தூரம் உள்ள திருவேங்கிடம் அல்லது சிவகாசி அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அவசர காலங்களில் கிராம மக்கள் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் சிகிச்சை பெறுவதில் பாதிப்பு நிலவுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கர்ப்பிணி பெண்கள் 27 கி.மீ தூரம் உள்ள சிவகாசி, அல்லது விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதேபோல் செவல்பட்டியை சுற்றிலும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் அதிகம் இயங்கி வருகிறது. விபத்து காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த பலர் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் சம்பவமும் தொடர்கிறது. செவல்பட்டியில் 24 மணிநேரமும் செல்படும் தரம் உயர்த்த பட்ட 30 படுக்கை வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். செவல்பட்டியில் தனியார் பொறியல் கல்லூரி, அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. ஏதேனும் வாகன விபத்து ஏற்பட்டால் மாணவர்கள் உடனடி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sewalpatti , Primary health center functioning in Sewalpatti should be upgraded: public demand
× RELATED கொட்டாம்பட்டி அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா