சென்னை: சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே 186 சென்ட் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சென்னை பெருநகர மாநகராட்சியின் மூலம் மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயிலின் குளம் சம்பந்தமாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போது இந்த குளத்தை சீரமைக்கும் பணிக்கான நிதி ரூ.1.50 கோடியிலிருந்து ரூ.1.70 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குளத்தின் நீர்த்தேக்க அளவு குறையாமல் குளத்தின் மொத்த பரப்பளவையும் பயன்படுத்துகின்ற வகையில் அதை சுற்றி நடைபாதை, செடிகளை அமைத்து உருவாக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்படும். இன்னும் 2 மாதங்களில் பணிகள் ெதாடங்கி ஓராண்டுக்குள் பணிகள் அனைத்தும் முழுமை பெற்று குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.