* ஒரே வாரத்தில் 500 வாழைகள் நாசம் * லட்சக்கணக்கில் இழப்பால் விவசாயிகள் கவலை
களக்காடு : திருக்குறுங்குடியில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் தொடர் அட்டகாசம் செய்ததில் ஒரே வாரத்தில் 500 வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனையில் உள்ளனர்.களக்காடு அருகே திருக்குறுங்குடியில் கரிசபத்து, குட்டி கரிச்சகுளம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் வாழை, நெல், தக்காளி மற்றும் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
இது தொடர்பாக வனத்துறைக்கு பல முறை புகார் அளித்தும் காட்டு பன்றியை வனப்பகுதிகளுக்குள் விரட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், காட்டுபன்றிகளின் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் சொல்லெண்ணா துயரத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளன.
இதனால் 200க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 4 மாத வாழைகள் ஆகும். நாசமான வாழைகள் திருக்குறுங்குடியை சேர்ந்த 13ம் வார்டு பேரூராட்சி கவுன்சிலர் நம்பிராஜனுக்கு (43) சொந்தமானது ஆகும். உரிய நேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து பாதுகாத்து வந்த நிலையில் நொடி பொழுதில் பன்றிகள் வாழைகளை நாசம் செய்தது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், கவுன்சிலர் நம்பிராஜன் ஆகியோர் கூறுகையில், இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 500க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் துவம்சம் செய்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயமே அடியோடு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. முதல்வர் ஸ்டாலின் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயத்தை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது.
அதுபோல களக்காடு வட்டார பகுதியில் நிலவும் காட்டு பன்றி உள்பட வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்கவும், வனவிலங்குகளால் பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் முதல்வர் தனி கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும்” என்றனர்.