ஒடுகத்தூர் : ஒடுகத்தூரில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமபுறம் பகுதிகள் என்பதால் தங்களின் வாழ்வாதாரத்தை நோக்கி நாள்தோறும் ஒடுகத்தூரில் இருந்து வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர் போன்ற மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஒடுகத்தூர் பஸ் நிலையம் வந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பஸ் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.இதனால், அவ்வப்போது மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைவதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. எனவே, மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நிரந்தரமாக பஸ் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.