ரேவா: மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். தெலங்கானா மாநிலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சோஹாகிகதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்து வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் தியோன்தர் மற்றும் ரேவா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், ‘‘விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளன். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு சென்றவர்கள்’’ என்றார். விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.