சென்னை: கழுகு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பேர் கொண்ட மாநில அளவிலான குழு அமைத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளார் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு. இந்தியாவில் 9 வகையான கழுகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓரியண்டல் வெள்ளை முதுகு கழுகு, நீளமான கழுகு, மெலிந்த கழுகு, இமயமலை கழுகு, யூரேசியன் கிரிபோன் கழுகு, சிவப்பு தலை கழுகு, எகிப்திய கழுகு, தாடி கழுகு, சினிரியஸ் கழுகு. கழுகுகள் இயற்கையாகவே சுற்றுச்சூழலுக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. நமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க உதவி புரிகிறது. அவற்றின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இருப்பினும் காலப்போக்கில் கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
அவை இப்போது அழிந்துபோகக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, கழுகு பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய நடவடிக்கை முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே, இந்தியாவில் கழுகு பாதுகாப்பு செயல் திட்டம் 2020-2025 மூலம், கழுகுகளை பாதுகாப்பதற்கான முன்னுரிமை பகுதிகள் மற்றும் உத்திகள் கண்டறியப்பட்டுள்ளது. கழுகு பாதுகாப்புக்கான செயல் திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழுவை அமைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கழுகுகளை பாதுகாப்பதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது கழுகுகள் பாதுகாப்பிற்கு யோசனை, திட்டங்கள் வழங்கும். மாநில அளவில் குழு அமைத்து அதற்கான அரசாணை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார்.