சென்னை: உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாப்பது, தீ காயம் ஏற்பட்டால் எப்படி முதலுதவி அளிப்பது, மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் மணி கூறியதாவது: விபத்துகளை குறைப்பதற்காகவும், விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தவிப்பதற்காகவும், மக்களுக்கு விபத்து பற்றி எச்சரிக்கையாக இருப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
விபத்து பல வகைகளில் நடக்கும். சாலை விபத்து, தீவிபத்து, குடும்பத்தில் சண்டை, தொழிற்சாலைகளில் விபத்து, குழந்தைகளுக்கு எதிராக, முதியோர்களுக்கு எதிராக என பலவகைகளில் விபத்து ஏற்படுகிறது. இதில், சாலை விபத்து முக்கியமானது. சாலைகளில் செல்லும் போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். செல்போன்களை பயன்படுத்துவது, மிக அதிக சத்தமாக பாட்டு வைப்பது இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது. விபத்து ஏற்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சாலை ஓரங்களில் அவசர உதவிக்காக நம்பர் இருக்கும். அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதன் மூலம் உயிர் இழப்பு, உடல் ஊனம் ஏற்படுவதை தவிர்க்கலாம். வீட்டில், ஏசி வெடித்தல், தொலைக்காட்சி பெட்டி வெடித்தல், சிலிண்டர் வெடித்தல், கார் வெடித்தல், ஆகியவற்றால் தீ காயங்கள் ஏற்படலாம், உடல் ஊனம் ஏற்படலாம். உயிர் இழப்பு ஏற்படலாம். விபத்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.