சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா” திட்டங்களின் கீழ் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆய்வகத்திற்கு இலச்சினை (லோகோ) வடிவமைக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்போடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதை உருவாக்குவதில் அதன் தோற்றம், குறிக்கோள் மற்றும் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக அமைய வேண்டும். இதுகுறித்து ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய சிறந்த திறனை பயன்படுத்தி இலச்சினையை உருவாக்கி மாநகராட்சிக்கு suggestions.gpl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் படைப்புகளை அனுப்பலாம்.
இதுகுறித்த விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இலச்சினைகள் தேர்வு குழுவினரால் பார்வையிடப்பட்டு, அதன் அசல் தன்மை, படைப்பாற்றல் தொகுப்பு மற்றும் காட்சியின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த இலச்சினை தேர்வு செய்யப்படும். இந்த போட்டி வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இலச்சினைக்கு ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.