சென்னை: அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் முதல் நூறு அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து சார்பதிவாளருக்கும் பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் முதல் நூறு அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி ஏற்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சாதாரண டோக்கன் பதிவு செய்வதற்கு ஏதுவாகும் நாளிலேயே தட்கல் டோக்கனும் பதிவு செய்வதற்கு ஏதுவாக மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நூறு அலுவலகங்களைப் பொறுத்து சாதாரண டோக்கனும் தட்கல் டோக்கனும் ஒரேநாளில் ஒருங்கே பதிவு செய்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் உருவாகும்.
பொதுமக்கள் தங்கள் பதிவு செய்யும் வசதிக்கு ஏற்ப சாதாரண டோக்கனை அல்லது தட்கல் டோக்கனை பெற்று ஆவணப்பதிவிற்கு சார்பதிவாளர் அலுவலகம் வரலாம். ஒரு குறிப்பிட்ட நாளில் 10 தட்கல் டோக்கன்கள் கூடுதலாக கீழ்க்கண்டவாறு அனுமதிக்கப் பட்டுள்ளது. ஒரு தட்கல் டோக்கனுக்கான பதிவுக்கட்டணம் ரூ.5 ஆயிரம் என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி கட்டணத்தை வசூலித்த பின்னரே டோக்கன் பதிவாகும். தட்கல் டோக்கன் செலுத்திய பின்னர் அன்றைய நாளில் பதிவுக்கு வர இயலவில்லை எனில் தட்கல் டோக்கன் செல்லாததாக கருதப்படுவதுடன் தட்கல் கட்டணமும் திருப்பித்தர வேண்டிய அவசியமில்லை. எனவே மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி அலுவலகங்களில் தட்கல் டோக்கன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.