சென்னை: காஸ் குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தில் காஸ் குடோன் விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தேமுதிக ஒன்றிய துணை செயலாளர் பூபதியின் மகன் சண்முகபிரியனும் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்தேன்.
இதில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.