சென்னை: என்ஐஏ சோதனை காரணமாக, பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து, பாஜவினர் வீடுகள், அலுவலகங்கள், கார் ஆகியவை தாக்கப்படுவது, பெட்ரோல் குண்டு வீசுவது என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் எதிரொலியாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும் சென்ட்ரல் ரயில்வே காவல் உதவி ஆணையர் முத்துக்குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில், நடைமேடை 6 மற்றும் 8, 9 ஆகிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.