ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ. 27 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை - திருவள்ளுர் நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடி செலவில் புதிதாக மேம்பாலப்பணிகள் கடந்த 2018 ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பாலத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதிகளை சேர்ந்த மக்கள் திருவள்ளூர் செல்வதற்கும், அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, மேலக்கரமனூர், வடதில்லை, மாம்பாக்கம் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கிராமங்களான அனந்தேரி, மேலக்கரமனூர், பேரிட்டிவாக்கம் போன்ற கிராமக்கள் பஸ் வசதி இல்லாததால் நடந்தும், சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கிறார்கள், ஆனால் அவர்கள் பாலத்தின் மீது இருளில் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்கள். எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வழியாக ஆரணியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டியது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால் பாலத்தை கட்டி முடித்ததும் அதன் மீது மின் விளக்குககள் பொருத்தவில்லை இதனால் பாலம் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. எனவே பாலத்தின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். மேலும் புதிய பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்பு சுவற்றில் சினிமா மற்றும் கட்சி போஸ்டர்கள் , வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டுவது மட்டுமல்லாது, சுவர் விளம்பரமும் செய்கிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் , போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரம் எழுதுவதை தடுக்க வேண்டும் என கூறினர்.