சென்னை: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு அமராவதி அணையிலிருந்து 8,104 மில்லியன் கன அடி நீர் 135 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பகுதிகளிலுள்ள நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 5443.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2661.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், மொத்தம் 8104 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறந்து விட வேண்டும்.
25.09.2022 முதல் 07.02.2023 வரை 135 நாட்கள் என்ற அடிப்படையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.