சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உட்பட பிற உயர்கல்வி நிறுவனங்களை போல், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (24ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.