×

திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்: கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள்,  கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியையொட்டி பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில்தான் நடைபெறும். அதுமட்டுமின்றி திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம், ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விளையாட்டு குழுக்களை சேர்ந்தவர்களும் தங்களது விளையாட்டு போட்டிகளை இந்த மைதானத்தில்தான் நடத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் ஏராளமான பொதுமக்கள் இந்த மைதானத்தில் தான் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், தனி நபர்கள் சிலர் புகார் கூறியதன் அடிப்படையில் விளையாட்டு மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு பொதுமக்களும், உள்ளூர் இளைஞர்களும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாதமாக இந்த விளையாட்டு மைதானத்தில் எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருப்போரூர் சமத்துவ இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்குழு சார்பில் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த மனுவில், ‘திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறந்து விட வேண்டும். மேலும், தண்டலம் கிராம பெரிய ஏரியின் நீர்நிலை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : Tiruppurur Govt High School , Tiruppurur Govt High School playground should be opened for use: Collector, public demand
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...