×

இந்தியாவின் ஒற்றுமையை காக்க நாடு முழுவதும் திராவிட மாடல் தேவை: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தியாவின் ஒற்றுமையைக் காக்க நாடு முழுவதும் ‘திராவிட மாடல்’ தேவைப்படுகிறது என்றும், நாடாளுமன்ற களத்துக்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கலைஞர் இருந்திருந்தால், எப்படி ஒரு முப்பெரும் விழா நடத்தப்பட்டு, அதில் நாம் அனைவரும் திரண்டு வந்து ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் கலந்துகொண்டிருப்போமோ, அதற்கு எள்ளளவும் குறையாத வகையில், விருதுநகரில் செப்டம்பர் 15ம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கடல் அலையாய், அணை விளிம்புவரை பெருகிய வெள்ளமாய்த் திரண்டு வந்து கலந்து கொண்டு, எழிலும் ஏற்றமும் கூட்டியமைக்காக, தொண்டர்களின் கரங்களையும் பற்றிக் கொண்டு, இந்தக் கடிதத்தின் வாயிலாக எனது இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடியல் அரசின் வெற்றிச் செய்தியை இடி முழக்கமென உரக்கச் சொல்லும் விழாவிற்காக விடிய விடியத் தொண்டர்கள் அணி அணியாய் வந்தபடியே இருந்தனர். பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று காலையில், மதுரையில் உள்ள ஆதிமூலம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ சமுதாயத்திற்கான காலைச் சிற்றுண்டி எனும் செறிவான திட்டத்தைத் தொடங்கி வைத்து,  விருதுநகர் நோக்கிப் புறப்பட்டேன். ‘எங்களைப் பார்’ என்பதுபோல இருபுறமும் பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் திரண்டிருந்தனர். அன்புக் கரம் நீட்டி, ஆனந்தக் குரல் எழுப்பினர். இன்முகத்துடன், புன்சிரிப்புடன் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் கடலில் நீந்தியபடி விழா மேடைக்கு நானும் திமுக முன்னோடிகளும் வந்து சேர்ந்தோம்.  விருதுநகர் மாவட்டத்தின் ‘மருதிருவர்’ என நான் அடிக்கடி சொல்கின்ற மாவட்டக் செயலாளர்கள், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசுவும் செயல் புயல்களாகப் பணியாற்றி, விழாவைச் சிறப்பாகவும் சீர்பெருக்கியும் வெற்றிகரமாகவும் நடத்திக் காட்டினர்.  மேடையில் அமர்ந்திருந்தபோது, எதிரே கண்ணுக்குத் தெரிந்த வரை உடன்பிறப்புகளின் இனிய முகங்கள் தான். நமது திமுக பொருளாளர், விழாவில் கலைஞர் விருது பெற்ற டி.ஆர்.பாலு எம்.பி. நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் மேடைக்கு வந்து சேர இயலாமல் மக்கள் கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருந்தார்.
 
முப்பெரும் விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது, முரசொலியில் முத்தமிழறிஞர் எழுதும் உடன்பிறப்பு கடிதங்கள் தான். 4041 கடிதங்களை 21,510 பக்கங்களில் 54 தொகுதிகளாக சீதை பதிப்பகம் கவுரா ராஜசேகர் தொகுத்திட, அந்த வரலாற்று ஆவணத்தை விழா மேடையில் வெளியிட்டு பெருமை கொண்டேன். திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய வரலாற்று ஆவணம் கலைஞரின் கடிதத் தொகுப்புகள். ஆலமரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூச்செடி மலர்வது போல, கலைஞரின் கடித ஆவண வெளியீட்டினைத் தொடர்ந்து, ‘திராவிட மாடல்’ என்பதற்கான இலக்கணம் குறித்து எளிய முறையில் நான் ஆற்றிய உரைகளில் இருந்து சிறிய சிறிய அளவிலான கருத்துகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட சிறிய நூல். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக் கொண்டார். திமுகவின் இளைய தலைமுறை எளிதில் படித்தறியக் கூடிய வகையில் டைரி போன்ற வடிவமைப்பில் திராவிட மாடல் நூல் வெளியிடப்பட்டுள்ளது.  தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தோன்றிய நாள் இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாடுகிற நாளில் திமுகவின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னோடிகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது கலைஞர் ஏற்படுத்திய எழுச்சியான வழிமுறை. மேலும், விருதும், பொற்கிழியும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் 15 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழுடன் பொற்கிழியும் அளிக்கப்பட்டது.

உங்களின் ஒருமித்த குரலாகத் தான் நான் ஒலித்தேன். ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதிலும் உள்ளதை எடுத்துச் சொல்லும் மூத்த உடன்பிறப்பாகத்தான் என் கருத்துகளை எடுத்து வைத்தேன். தொண்டர்கள் இல்லாமல் இந்த இயக்கம் இல்லை, இத்தனை பெரிய வெற்றி இல்லை. தொண்டர்களின் நலன் போற்றிக் காத்து, இயக்கத்தின் வலிமையை என்றும் பெருக்கி நாம் சந்திக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றன. மாநில உரிமைகளைக் காப்பதற்கும் நம் மக்களுக்கான திட்டங்களைத் தடையின்றி நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒன்றிய அரசு அமைந்தாக வேண்டும். அதற்கான களமாக நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது. அந்தக் களத்திற்கு நாம் இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும். விருதுநகர் முப்பெரும் விழா அதற்கான பாசறைப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜ அரசின் இரட்டை ஆட்சி முறைக்கு முடிவு கட்டிட, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றிட, நாடு முழுவதுற்கும் ‘திராவிட மாடல்’ தேவைப்படுகிறது.
 அதற்கான முழக்கமாகத் தான் ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே’ என்று அந்த மேடையில் உங்களின் குரலாக நான் முழங்கினேன். முப்பெரும் விழாவில் உங்கள் முகம் கண்டு மனம் மகிழ்ந்ததுடன், உடன்பிறப்புகளாம் உங்களின் மீதுள்ள முழு நம்பிக்கையினால் இந்த முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறேன். தொடர் வெற்றிகளைக் காண்பதற்கு, விருதுநகர் ஒரு நல்ல தொடக்கம். அது வெற்றிக் களத்திற்கான முரசொலி, களம் காண்போம், வெற்றிகளைக் குவிப்போம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : India ,Chief Minister ,MK Stalin , Nationwide Dravidian model needed to preserve India's unity: Chief Minister M.K.Stal's letter to activists
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...