திருப்புவனம்: திருப்புவனம் அருகே பூவந்தியில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய சுகாதாரத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். உள்நோயாளிகள்,வெளி நோயாளிகள் வருகை, சிகிச்சை முறை, ஆபரேசன் தியேட்டர், நிர்வாகம் போன்ற 9 வித கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில் பூவந்தி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும், கோட்டையூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையமும் தகுதி பெற்று தேசிய சான்று பெற்றுள்ளன. சென்னையில் நடந்த விழாவில் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூவந்தி வட்டார மருத்துவ அலுவர் சேதுராமுவிடம் சான்றை வழங்கினார்.