×

அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் பண்டிகை வாழ்த்து

சென்னை: அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதை பறைசாற்றுவதாக ஓணம் பண்டிகை அமையட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டு பெருவிழாவான திருவோணம் இன்று கொண்டாடப்பட இருக்கிறது.

நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள். அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்தி சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். ‘‘மாயோன் மேய ஓண நன்னாள்” என சங்க இலக்கியமாம் மதுரை காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா.

கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது. அத்தகைய திருநாளை தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும், சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதை பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டு திருவிழாக்கள் அமையட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* உலகத்தரத்திலான தமிழியல் ஆய்வுகள் பெருக வேண்டும்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உலகத்தரத்திலான தமிழியல் ஆய்வுகள் பெருக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்ததன் விளைவாக, தலைநகரில் இயங்கி வரும் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இந்திய மொழிகள் மையத்தின் ஒரு பிரிவாக, தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்கு அரிய பங்காற்றி வருகிறது. தலைநகரில் தமிழ் தனித் துறையாக, தனித்த அடையாளத்தோடு செயல்படுவதற்கும், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும், முதுநிலை பட்டப்படிப்பை அளிப்பதற்கும் ஏதுவாக, தமிழ் காக்கும் நமது அரசு ரூ.5 கோடி நிதியை வழங்கியுள்ளது. வளமான, நுண்மையான, உலகத்தரத்திலான தமிழியல் ஆய்வுகள் பெருக வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : CM ,Stalin , Love, unity, equality and brotherhood is our strength: CM Stalin's Onam greetings
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...