கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், பலராமபுரம், லட்சுமிபுரம், ஏவிஎம் நகர், கபாலி நகர், எம்.ஜி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல தொழிலதிபரும், ஆதனூர் திமுக கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான தமிழ்அமுதன் ஊராட்சிக்கு உட்பட்ட 13 இடங்களில் தனது சொந்த நிதியிலும், 4 இடங்களில் ஊராட்சி நிதியிலும், தலா ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 17 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளார். இதனை, ஆதனூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘உள்ளாட்சி மன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் கூறியபடி 17 இடங்களில் ஊராட்சி மன்ற தலைவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார். இதில், 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடிக்கும் வகையில் ஆக்சஸ் கார்டினை இயந்திரத்தில் பொருத்தியதும் உடனே தண்ணீர் வரும். இதனால் பொதுமக்கள் சிரமமின்றியும், தங்கு தடையின்றியும் குடிநீர் பிடித்து வருகிறோம். ஆதனூர் ஊராட்சியில் தண்ணீர் பிரச்னை தீர்த்து வைத்த ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.’’ என்றனர்.