சென்னை: முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் கடமை துணைவேந்தர்களுக்கு உள்ளது. அதனை பல்கலை கழக துணைவேந்தர்களும் செயல்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக தான் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு ஐஏஎஸ் போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியை கல்லூரிகளில் வழங்கவேண்டும். போட்டி தேர்வுகளை எழுதும் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தேவைபட்டால் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் கணினி குறித்த பயிற்சியை வழங்க வேண்டும்.
எல்லோருக்கும் எல்லா பயிற்சியும் வழங்கவேண்டும்.அனைத்து துணை வேந்தர்களும் நமது மாநில கல்வி கொள்கைக்கான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். தமிழக உயர்கல்வி மேம்பாட்டிற்கான கருத்துக்களையும் துணைவேந்தர்கள் வழங்கவேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக தடைபட்ட அனைத்து சலுகைகளும் தற்போது வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணிக்கும், கௌரவ விரிவுரையாளராகள் 1895 பேரும் நிரப்பிட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். முதல்வரின் கனவை நிறைவேற்றிடும் பணி மற்றும் கடமை துணைவேந்தர்களுக்கு உள்ளது. அதனை அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.