சென்னை: வேளச்சேரி கெஸ்ட் ஹவுசில் மாடல் அழகியுடன் ஏற்பட்ட தகராறில், காவலன் செயலி மூலம் கொடுத்த தகவலால் உதவி பேராசிரியர் உள்பட இருவர் சிக்கினர். இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வேளச்சேரி, தரமணி 100 அடி சாலை அருகே உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று புகார் வந்தது. இதையடுத்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த 2 ஆண்கள் மற்றும், 2 இளம்பெண்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் (41), தனது நண்பர் ஐயப்பன் என்பவரோடு சேர்ந்து ‘லோகன்டோ’ என்கிற ஆப் மூலம் பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர்களை தொடர்பு கொண்டு, 2 பெண்களை புக் செய்ததும், பின்னர், அவர்களை கோயம்பேட்டில் இருந்து காரில் அழைத்துக்கொண்டு வேளச்சேரியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்ததும், பின்னர் ஒரு பெண்ணிற்கு தலா ரூ.11,000 என பேசி ரூ.22,000 கொடுத்து, தனித்தனி அறைக்கு சென்றதும் தெரிந்தது. மேலும், கார்த்திகேயன் தன்னுடன் வந்த மாடல் அழகியிடம் ஒருமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர், மீண்டும் அந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தபோது அவர் வர மறுத்துள்ளார். மேலும், நீங்கள் கொடுத்த பணத்திற்கு ஒருமுறை தான், ஒரு நாள் முழுவதும் கிடையாது என, அப்பெண் கறாராக கூறியுள்ளார்.
ஆனால், கார்த்திகேயன் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தியதாக தெரிகிறது. இதனால், அலறி துடித்து அவரிடம் இருந்து கழிவறைக்குள் ஒளிந்து கொண்டார். பின்னர், தான் ஆபத்தில் சிக்கியிருப்பதாக காவலன் செயலி மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வேளச்சேரி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்தது தெரியவந்தது. மேலும், கார்த்திகேயன், ஒரு நாள் முழுவதற்கும் எனக்கூறி, ரூ.11000 வாங்கிக் கொண்டு, ஒரு முறைதான் என மாடல் அழகி ஏமாற்றுவதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பெண்களையும் மீட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிக்கிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.