சென்னை: வடபழனி கங்கப்பா நாயுடு தெருவைச் சேர்ந்த தமீம் அன்சாரி, அதே பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென கையில் வைத்திருந்த 2 பெட்ரோல் வெடிகுண்டு களை விடுதிக்குள் வீசி விட்டு தப்பினர். பலத்த சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வரவேற்பு அறை மற்றும் அங்குள்ள கண்ணாடி சேதமடைந்தது. தகவலறிந்து வந்த வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் ஆகியோர், விடுதியில் ஆய்வு செய்தனர்.
பின்னர், வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல்துறையினர்,அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 35 வயது மதிக்கத்தக்க இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து, பெட்ரோல் குண்டுகளை விடுதியின் வரவேற்பு அறையில் தூக்கி வீசுவது பதிவாகியுள்ளது.இதில் பதிவான முக அடையாளங்களை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேநேரம் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களிலும் விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.