மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில்,‘நம்ம ஊரு சூப்பரு’நிகழ்ச்சிகள் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் கள்ளபிரான்புரம் மற்றும் நெல்வாய் ஊராட்சிகளில் தமிழக அரசின்‘நம்ம ஊரு சூப்பரு’நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடந்தன. இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைசெல்வன், கள்ளபிரான்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, ஊராட்சி செயலர்கள் சுந்தர்ராஜ், செல்வகுமார் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது, ஊராட்சிகளில் உள்ள அரசு கட்டிடங்களான அங்கன்வாடி கட்டிடம், பள்ளிகள், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடங்கள், வருவாய் ஆய்வாளர் கட்டிடங்கள், ரேஷன் கடைகள், சேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான அரசு கட்டிடங்களை தூய்மை படுத்துதல், கால்வாய்களை சுத்தம் செய்தல், பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் உள்ளடக்கிய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடந்தன. மக்கும் குப்பை மக்காத குப்பை, திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு கருத்துரைகள் ஆகியவை இடம் பெற்றன.
இதில், ஊராட்சிகளில் உள்ள கழிவறைகள், மகளிர் சுகாதார வளாகம், தெருக்கள், பள்ளி வளாகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.