உடுமலை: உடுமலை பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குதொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இன்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் யாரும் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல், அமராவதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நீர்மட்டம் 88.26 அடியாக இருந்தது. அணைக்கு 2310 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. 2519 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, சோலையார் 86, பரம்பிக்குளம் 96, ஆழியார் 42, திருமூர்த்தி அணை 40, அமராவதி அணை 20, வால்பாறை 122, அப்பர் நீரார் 142 , லோயர்நீரார் 95, காடம்பாறை 27, சர்க்கார்பதி 52, தூணக்கடவு 82, பெருவாரிபள்ளம் 96 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.