×

₹100 கோடி மோசடியில் தலைமறைவான நகை கடை உரிமையாளர் வீடு முற்றுகை

*சாலை மறியலால் பரபரப்பு

சேலம் : சேலம் உள்பட பல்வேறு இடங்களில் நகைக்கடை நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள உரிமையாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் வீராணம் வலசையூரைச்சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஆத்தூர், கரூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ் என்ற பெயரில் நகை கடை வைத்திருந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு நகை, பணத்துடன் தலைமறைவாகி விட்டார். சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதில், மேலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். உரிமையாளர் சபரிசங்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

சேலத்திற்கான உத்தரவு நகல் வந்துவிட்டது. இதையடுத்து அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோர், நேற்று வீராணம் வலசையூரில் உள்ள சபரி சங்கர் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதனால் அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

பின்னர் வலசையூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதித்து பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த வீராணம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. ‘புகார் கொடுத்து பல மாதங்கள் ஆன நிலையில், ஏமாற்றிய சபரி சங்கரை இதுவரை கைது செய்யவில்லை. மோசடி செய்த பணத்தை வைத்துக்கொண்டு அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

பணம் கட்டிய நாங்கள் ரோட்டிற்கு வந்துவிட்டோம். அவரை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மோசடி செய்த பணம் அனைத்தையும் செலவு செய்தபிறகுதான் அவரை போலீசார் பிடிப்பார்களா? அவர் வக்கீல் ஒருவரின் பாதுகாப்பில் தான் இருக்கிறார். உடனடியாக கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும்’ என்று மறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

The post ₹100 கோடி மோசடியில் தலைமறைவான நகை கடை உரிமையாளர் வீடு முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Salem ,Sabarishankar ,Veeranam Valasayur ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...