புதுடெல்லி: பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, அகில இந்திய நியாய விலைக்கடை டீலர்கள் சங்க துணைத்தலைவராக உள்ளார். இச்சங்கம், நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய், பருப்பு, அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் வீணாகும் பொருட்களுக்கான இழப்பீட்டை அரசு தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரகலாத் மோடி தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று நியாய விலைக்கடை டீலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்ட நிர்வாகிகள், தங்களின் 9 அம்ச கோரிக்கை அடங்கிய தீர்மானத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக இன்று அவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தும் முறையிட திட்டமிட்டுள்ளனர்.