உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கறிக்காக மாடுகளை வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். இந்த மாடுகளை மடக்கி பசு பாதுகாப்பு மையத்தில் விடாமல் இருப்பதற்காக மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜவை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் மற்றொரு நபரிடம் பேசும் ஆடியோ நேற்று உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் வெளியானது. அந்த ஆடியோவில், மாதம் ரூ.50 ஆயிரம் மாமூல் வழங்காவிட்டால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்போம், நான் கூப்பிட்டால் 50 பேர் கூட வருவார்கள், நான் நினைத்தால் ஒரு வண்டி கூட உளுந்தூர்பேட்டை வழியாக போகாது, இறைச்சிக்காக மாடுகளை எடுத்து செல்பவர்களிடம் இதுபற்றி கூறுங்கள், இது ரகசியமாக இருக்கும், நான் மற்றவர்களை போல் இல்லை, யாரிடமும் கூற மாட்டேன் என இருவர் பேசிக்கொள்கின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாடுகளை விற்பனைக்காகவும், கறிக்காகவும் லாரிகளில் ஏற்றிச் செல்பவர்களுக்கு காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.