தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்பில் புதிதாக மழைநீர் கால்வாய் பணிகளை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 48வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் நல்லப்ப வாத்தியார் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் இங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
இதன்காரணமாக, அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், இங்கு மழைநீர் தேங்கும் இடங்களில் புதிதாக மழைநீர் கால்வாய்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் கால்வாய் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, ஐடீரீம் மூர்த்தி எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று, மழைநீர் கால்வாய் பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், ரெயின்போ விஜயகுமார், வட்ட செயலாளர் பாலன், எம்.எம்.சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.