விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்த வழக்கில் கைதாகி சேலம் சிறையில் உள்ள பள்ளி தளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புஷ்பராணி, அவர்களை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியும், இன்று பிற்பகல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து விசாரணை அதிகாரியான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார், 5 பேரையும் அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானுங்கோ நேற்று சின்னசேலம் பள்ளியில் ஆய்வு செய்தார்.