திருவொற்றியூர்: மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர். மணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழையால் இங்குள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்ததால், அந்த வகுப்பறையில் படித்த மாணவர்களை வெளியேற்றி, வகுப்பு அறையை பூட்டி வைத்தனர். பின்னர் பழுதடைந்த வகுப்பறையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பூட்டிக் கிடந்த வகுப்பறையில் நேற்று காலை பிளாஸ்டிக் சேர் ஒன்றை எடுக்க பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் உள்ளே நுழைந்தபோது தீடீரென மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.